அரசியல்இந்தியா

பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை பகுதி குடியிருப்புகளை காப்பாற்ற முடியாது: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, குடிசைவாசி மக்களுக்கு ரூ.3,000 கொடுத்து அவர்களின் வாக்குரிமை பறிக்க மிகப் பெரிய சதி நடைபெறுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ தகவலில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள குடிசைவாசிகளிடம் இருந்து எனக்கு பல அழைப்புகள் வந்தன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனிநபர்கள் குடிசை பகுதி மக்களுக்கு ரூ.3,000 கொடுத்து அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். தேர்தல் நாளில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக கூறி, அவர்களின் கை விரலில் அழியாத மையை வைத்து செல்கின்றனர். இத்தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது மக்களுக்கு எதிரான மிகப் பெரிய சதி.

பணத்துக்காக விரலில் மை வைத்துக்கொண்டு, அவர்களின் கூறுவதுபோல் போலியாக வாக்களித்தால், அவர்கள் உங்கள் மீதே நடவடிக்கை எடுத்து கைது செய்வர். இதுபோன்ற மோசடி வழக்கில் சிக்கினால் 8 முதல் 10 ஆண்டுகள் சிறை செல்ல வேண்டியிருக்கும். இந்த பொறியில் மக்கள் சிக்க வேண்டாம்.

யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் கையில் மை வைக்க வேண்டாம். இது வாழ்நாள் முழுவதும் பிரச்சினையாகிவிடும். தெரியாமல் கையில் மை வைத்துக் கொண்டால், சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஓட்டுப்போட செல்லாமல் கையில் மை வைத்துக் கொண்டால், கள்ள ஓட்டு போட்டதாக நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், குடிசை பகுதி குடியிருப்புகளை காப்பாற்ற முடியாது. குடிசைப் பகுதிகளை அவர்கள் இடித்து பணக்கார நண்பர்களிடம் ஒப்படைத்து விடுவர். நீங்கள் எனது கரத்தை வலுப்படுத்தி, ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் , நான் குடிசைப் பகுதிகளை இடிக்கவிட மாட்டேன். இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button