கும்பகோணம் அரசுக் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம் – கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஒரு திருமணமாகாத மாணவி கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து, அதனை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பில் இருந்த போது திடீர் பிரசவ வலி ஏற்பட்ட மாணவி, கழிவறைக்குச் சென்று பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பின்னர் குழந்தையை துணியில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, சாதாரணமாக வகுப்பிற்குத் திரும்பியுள்ளார். எனினும், அவருக்கு ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனையின் போது நடந்ததை ஒப்புக்கொண்டார். உடனடியாக குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
ஆடுதுறை மகளிர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கர்ப்பம் கலைக்க முடியாத நிலையில், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பிரசவத்தை மேற்கொண்டதாக மாணவி தெரிவித்துள்ளார். தற்போது தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.