13 வயது மாணவனின் புகார்: அமைச்சரின் உத்தரவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள எழுமூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கரை எழுமூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவன் ரித்திக் (13) தனது நண்பர்களுடன் சந்தித்து முறையீடு செய்தார்.
அவரது முறையீட்டில், “அரியலூரில் இருந்து தொழுதூர் செல்லும் அரசுப் பேருந்தை எழுமூரில் நிறுத்துமாறு நானும் எனது இரு நண்பர்களும் கை காட்டி நிறுத்த முயன்றோம். ஆனால் பேருந்து ஓட்டுநர் எங்களை ஏற்ற மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு பேருந்தை நிறுத்தாமலேயே சென்றுவிட்டார்” என்று குறிப்பிட்டார்.
இந்த புகாரை கேட்டறிந்த அமைச்சர் சிவசங்கர் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அரியலூர் பேருந்து பணிமனை மேலாளர் குணசேகரன் நேற்று பேருந்து ஓட்டுநர் திருமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.